Tuesday, September 5, 2017

குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!



நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைத்தான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இல்லை ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவோ அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. மாற்றம் வரும் நம்புவோம் ஐயா

    ReplyDelete
  2. //குட்டதலை குனிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
    குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்! //

    புலவர்கள் வாக்கு பொய்ப்பதில்லை. காலம் வரும். காத்திருப்போம் ஐயா.

    ReplyDelete
  3. காலத்தே தீரட்டும் துயர்.

    தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  4. முகநூல் உள்டப்பாவுல லிங்க் அனுப்பி இருந்தும் என் பதிவுக்கு வருவதில்லையே! ஏன்பா?!

    ReplyDelete
  5. ஒரு வாக்குக்கு மூன்று முதல்வர்களைப் பார்த்த பெருமை நமக்கே சேரும் அய்யா :)

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா !

    ஏற்றங்கள் இருந்தாலும் எதிர்கா லத்தில்
    ...எதிர்மறையாய்ச் சிந்திப்போர் ஆளும் நாட்டில்
    மாற்றங்கள் வெறுமைகளாய்ப் போகும் ஐயா
    ...மனச்சாட்சி பொருளிழந்து வாடும் ஐயா
    நேற்றொன்று இன்றொன்றாய் நெருடும் சட்டம்
    ...நிலையில்லா அரசுக்கே வழிவ குக்கும் !
    ஆற்றலுள இளைஞோர்கள் அணிதி ரண்டால்
    ...அவனியிலே மறுமலர்ச்சி கொள்ளும் ஐயா !

    தம +1

    ReplyDelete
  7. நான் வந்திட்டுப் போறேன்ன்.. கவிதைக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete
  8. மாற்றம்.... பலரின் எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதுதானே...

    த.ம. ஏழாம் வாக்கு.

    ReplyDelete
  9. அரசியலுக்கு நல்லவர்கள் வருவதில்லை சாக்கடை என்று தாண்டிச் செல்கிறார்கள் அந்த நிலைமை மாறினால்தான் விடியல் அதுவரை காத்திருக்க வேண்டும்தானே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...