Showing posts with label கவிதை புனைவு வாழ்வியல் நெறி முறை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு வாழ்வியல் நெறி முறை. Show all posts

Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!


அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை
   அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை!
வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை
   வளராது பயிரங்கே!துயரே! எல்லை!
களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!
உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை
    உணர்வின்றி நடப்பார்க்கும் அதுவே எல்லை!

பொய்சொல்லி வாழ்வதும் வாழ்வா இல்லை
    புறம்சொல்லி திரிவார்க்கும் வருமே எல்லை!
மெய்சொல்லி வரும்துன்பம் உண்மை யில்லை
    மேதினியில் அவர்வாழ்வே புகழின் எல்லை!
செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
     சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
     தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!


விதியென்ற சொல்லுக்கு வலிமை இல்லை
     வீணென்று புறந்தள்ளி நடப்பின் எல்லை
மதிவென்று வாழ்வுகுத் தாழ்வேஇல்லை
   மட்டற்ற மகிழ்வுக்கே காணார் எல்லை!
எதுவொன்றும் குறையின்றி ஆயின், இல்லை
     இனிதென்ற சொல்லுக்கு, வாழ்வில் எல்லை!
இதுவென்று சொல்பவர் யாரும் இல்லை
     இவ்வண்ணம் செயல்படின் உண்டோ எல்லை!

                    புலவர் சா இராமாநுசம்
   


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...