Showing posts with label கூடங்குளம் குமுறும் உளம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label கூடங்குளம் குமுறும் உளம் கவிதை புனைவு. Show all posts

Thursday, March 22, 2012

கூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்!


நாடகமே உலகமென
      நவின்றதுவும் அக்காலம்!
பாடகரும் பாடியதை
      பயின்றதுவும் பிற்காலம்!
ஊடகங்கள் ஏடகங்கள்
      உணர்த்துவதும் தற்காலம்!
கூடங்குளம் நமக்கெல்லாம்
      கூறுவதும் முக்காலும்!

மாதக்கணகாக அங்கே
      மாதர்களும் போராட
ஆதரவு காட்டியவர்
      அம்மம்மா கைவிட்டார்!
சேதமில்லை என்றின்றே
      செப்பிவிட்டார்! ஒப்பிவிட்டார்!
வாதமென்ன செய்வாரா?
      வாயில்லா மக்களவர்!

ஊக்கம் கொடுத்தவரும்
    உற்றதுணை என்றவரும்
நோக்கம் என்னவென
     நோக்கவில்லை! அம்மம்மா!
காக்கும் கரமின்றே
      கைவிரித்து விட்டதம்மா!
ஆக்கம் அறியாதவர்
      அழுதமனம் தவிக்குதம்மா!

வேலியேப் பயிர்மேய
      விட்டகதை ஆயிற்றே
கூலிதந்து சூனியத்தை
     கொண்டநிலை ஆயிற்றே
காலிரண்டைக் கட்டிவிட்டும்
     கண்களையும்  கட்டிவிட்டும்
மேலிருந்து தள்ளிவிடும்
      மே(ல்)தாவி அரசியலே!
           வாழ்க!

             புலவர் சா இராமாநுசம்



   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...