விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!
தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பீர்-உம்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்
தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
ஏற்றவழி உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகையுடன் செப்ப வேண்டும்!-மேலும்
செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!
புலவர் சா இராமாநுசம்

