Thursday, March 22, 2012

கூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்!


நாடகமே உலகமென
      நவின்றதுவும் அக்காலம்!
பாடகரும் பாடியதை
      பயின்றதுவும் பிற்காலம்!
ஊடகங்கள் ஏடகங்கள்
      உணர்த்துவதும் தற்காலம்!
கூடங்குளம் நமக்கெல்லாம்
      கூறுவதும் முக்காலும்!

மாதக்கணகாக அங்கே
      மாதர்களும் போராட
ஆதரவு காட்டியவர்
      அம்மம்மா கைவிட்டார்!
சேதமில்லை என்றின்றே
      செப்பிவிட்டார்! ஒப்பிவிட்டார்!
வாதமென்ன செய்வாரா?
      வாயில்லா மக்களவர்!

ஊக்கம் கொடுத்தவரும்
    உற்றதுணை என்றவரும்
நோக்கம் என்னவென
     நோக்கவில்லை! அம்மம்மா!
காக்கும் கரமின்றே
      கைவிரித்து விட்டதம்மா!
ஆக்கம் அறியாதவர்
      அழுதமனம் தவிக்குதம்மா!

வேலியேப் பயிர்மேய
      விட்டகதை ஆயிற்றே
கூலிதந்து சூனியத்தை
     கொண்டநிலை ஆயிற்றே
காலிரண்டைக் கட்டிவிட்டும்
     கண்களையும்  கட்டிவிட்டும்
மேலிருந்து தள்ளிவிடும்
      மே(ல்)தாவி அரசியலே!
           வாழ்க!

             புலவர் சா இராமாநுசம்



   

Tuesday, March 20, 2012

மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்,


மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
   மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
   புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
   எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
   பாரதப் பிரதமரே! இதுஎல்லை!


முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
   முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
    அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
    தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
    இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!


சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
   செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
   எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
    நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!

              புலவர் சா இராமாநுசம்
 

Monday, March 19, 2012

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்தப் பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!


பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்



    

Thursday, March 15, 2012

ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே!அ


ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
   உடனடி செய்வது பொறுத்தமே!
இருநாள் வீணே போயிற்றே-தமிழ்
   இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் சிங்களர் உணரட்டும்-படை
   வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
    வாழ்வா சாவா? தெரியட்டும்!

கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
   கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் வடவரும் கற்கட்டும்-அதைப்
   பார்த்தே சிங்களர் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
  வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
   நடத்துவோம்! உண்மை! தப்பாதே!

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
    இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
   மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
    சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
    அறப்போர்! விரைவில் உய்விரே!

வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
   வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
    அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
   பார்த்தா..?புறப்படும்! இப்போதே!
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-நம்
    பேரினம் அழியவா வழிவிடுவீர்!?

                                 புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 14, 2012

வங்கக் கடலில் புயல்போல வருவீர்! எழுவீர்! அலைபோல!


இனியும் எதற்காம் வேடிக்கை-மத்தியில்
   எடுத்த முடிவவர் வாடிக்கை!
கனியும் காயல பிஞ்சவரே-ஆடிக்
   காற்றில் பறக்கும் பஞ்சவரே
பணிந்து வேண்டுதல் நம்தவறே-அறப்
   போரினைத் தொடர நம்மவரே
துணிந்து செயல்படின் இப்போதே-உடன்
   தொல்லைத் தீரும் அப்போதே!

ஊருக்கு ஊரும் ஊர்வலமே-உணர்வு
   ஓங்கிடத் தருவீர் ஒலிவளமே
யாருக்கும் அஞ்சிட வேண்டாமே-மேலே
    எதுவும் நடப்பினும் ஈண்டாமே
பேருக்கு செய்வது இதுவல்ல-வீண்
    போட்டிக்கும் செய்வது இதுவல்ல
கோரிக்கை வைத்தோம் பயனில்லை-என்றும்
    கோழையா? நாங்கள்! இனியில்லை

இலவு காத்த கிளியாகி-இரக்கம்
    இல்லா அரசால் பலியாகி
உலவ ஈழம் நடைப்பிணமாய்-நாம்
     உணர்வே இன்றி கிடப்போமா
நலமே பெற்றவர் வாழட்டும்-இன்றேல்
    நம்மினம் முற்றும் அழியட்டும்!
பலமே நமக்கு மனஉறுதி-சிங்கள
    பாவிகள் தமக்கு அதுயிறுதி

பொங்கி எழுவாய் தமிழகமே-சில
    போலிகள் ஒதுங்கட்டும் தமிழினமே
எங்கும் தொடங்கட்டும் அறப்போரே-இன
     அழிவைத் தடுத்திட இப்போரே
தங்குத் தடையது இல்லாமல்-ஏதும்
     தனிவழி யாரும் செல்லாமல்
வங்கக் கடலில் புயல்போல
     வருவீர்! எழுவீர்! அலைபோல!

                புலவர் சா இராமாநுசம்

Tuesday, March 13, 2012

ஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்!


மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கிலையா ?

                            புலவர் சா இராமாநுசம்

  

Monday, March 12, 2012

இன்றென் பதிவு இருநூறே!


இன்றென் பதிவு இருநூறே-நான்
   எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே!
சென்றன நாட்கள் இப்படியே-இனி
   செல்லுமா காலம் அப்படியே!
ஒன்றென இரண்டென நாளும்தர-என்
    உள்ளத்தில் கவிதை பிறந்துவர
நன்றென நீங்கள் நவின்றதுவே-மேலும்
   நல்கிடக் காரணம் ஆனதுவே

வளர்த்த பெருமை உமக்காகும்-உமை
   வாழ்த்திட வாய்ப்பு எனக்காகும்
தளர்ந்த வயதில் கோல்போல-எனக்கு
    தந்தீர் ஊக்கம் நாள்போல
விளைந்த கவிதை நிலைபோல-நல்
   விதையில் பெய்த மழைபோல
வளைந்த நெல்லின் கதிர்போல-நான்
    வணங்கிட வாழ்த்துவீர் முன்போல
 
தானே புயல்போல் என்னவளே-துயர்
   தாக்க மறைந்துப் போனதிலே
வீணே! வாழ்வு இனியென்றே-மனம்
   வெதும்ப ஏங்கும் நிலையன்றே
ஏனோ இனியும்  வாழ்வதென-என்ற
   எண்ணம் நெஞ்சில் சூழ்ந்ததென
நானோ! வருந்திட வலைப்பூவே-உயிர்
   நல்கிய திந்த அலைப்பூவே!


நேரம் போவது தெரியாமல்-வேறு
   நினைப்பே ஏதும் அறியாமல்
பாரம் மிக்க எண்ணமே-கவிதைப்
   படைக்க சூழும் வண்ணமே
யாரும் வருவார் போவாரே-அவர்
   எவரோ அறியார் ஆவாரோ
கூறும் எதுவும் செவியேறா –அது
   குறையா! நிறையா! மொழிவீரா..?

                புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...