ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று
அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே
கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம்
கொதிப்படைய இக்கவிதை இங்கேவிண்டேன்
மாசுதரும் இசெயலே காவல்துறைக்கே-ஆளும்
மாண்புகளும் பெறுவாராம் இதிலேபங்கே!
பேசுகின்றார் மக்கள்மிகத் துயரப்பட்டே-கறைப்
போக்கிடவும்? துடைப்பீரா வருத்தப்பட்டே!
ஏணியாக அனைவரையும் ஏற்றிவிட்டே-வாழ்வில்
என்றென்றும் வறுமையே நாளும்பட்டே
கேணியாக ஊருக்கே நீரும்தந்தார்-இன்று
கேவலமாய்த் தள்ளிவிட அந்தோ!நொந்தார்!
தோணியாகக் கரைதனிலே ஏற்றிவிட்டே-இன்று
துயரமெனும் தீயாலே எரியும்பட்டே
நாணுகின்ற நிலைதானே நெஞ்சில்கொண்டேன்-ஐயா
நானுமொரு ஆ, சி(றி)ரியன் எனவேவிண்டேன்
நாட்டுக்கே கோவலமாம் இந்தக்காட்சி-மிக
நல்லோரே சொல்லுங்கள் இதுவாமாட்சி
கேட்டுக்க ஆளில்லை! எண்ணவேண்டா-இந்தக்
கொடுமைக்கே இனியேனும் எல்லைஉண்டா
ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
உணராது நடப்பதும் என்னஅன்ன?
பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!
புலவர் சா இராமாநுசம்

