Saturday, May 26, 2012

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்!


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்!
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்!
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
!கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்!

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
   தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

Thursday, May 24, 2012

கோடைக் காலம் வந்து துவே !


கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே!
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே!
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே!
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே!

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே!
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்!
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்!
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே!

பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்!
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்!
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு!
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே!

வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே!
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக!
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே!
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 22, 2012

பதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்!



காணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க
   காலத்து பிசிராந்தை சோழன் போல!
காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே
   கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்!
  

இதயத்தில் வாழ்ந்திடும் திருநா ளாகும்-அது
   என்றுமே மறவாத ஒருநா ளாகும்!
உதயத்து எழுகின்ற கதிரைப் போல-என்
   உள்ளத்தில் உவகையோ எழவும் சால!

தலைநகர் சென்னையில் பதிவர் கூடி-ஏதும்
  தன்னலம் இல்லாத வழியே நாடி!
இலைநிகர் எனச்சொல்ல செய்த பணியே-அதை
   இயம்பிட வேண்டுமா? தங்க அணியே!

குடத்துள்ள விளக்கினைக் எடுத்துச் சென்றே-உயர்
   குன்றின்மேல் வைக்கின்ற செயலைப் போன்றே!
நடத்தினர் அறிமுக நிகழ்வு ஒன்றே-உலக
   நாடுகள் அறிந்துமே புகழ நன்றே!

வயதுக்கு மீறிய அறிவும் பெற்றே-அங்கு
   வந்திட்ட குழந்தையைக் காண லுற்றே!
வியப்புக்கே போனோமே நாங்கள் எல்லாம்-மேலும்
   விளக்கிட தமிழிலும் இல்லை சொல்லாம்!

எண்ணற்ற மரங்களை நாளும் நட்டார்-நம்
    எண்ணத்தில் பதியவே உரையும் இட்டார்!
கண்ணற்ற கயவரே! மரத்தை வெட்டும்-உம்
   கயமைக்கு இனியேனும் முடிவு கட்டும்!

மாப்பிள்ளை கோகுலும் விருது பெற்றார்-அவர்
   மகிழ்விலே கண்ணீரும் தளும்ப லுற்றார்!
மாப்பிள்ளை அழைப்பிதழ் தந்துவி ட்டார்-வந்தோர்
   மனமார அங்கையே வாழ்த்தி விட்டார்!

நிகழ்சிக்கு வித்தாக, சிவக்குமார் நண்பருடன்-அரிய
   நிகழ்ச்சியைத் தொகுத்திட்டார் கேபிள் சங்கர்!
புகழ்ச்சி உரியவரே வந்தோர் எல்லாம்-மேலும்
   போற்றலுக்கே ஆளானார் சங்கர லிங்கம்!

வந்தாரின் வயதில் மூத்தோன் யானே-ஆயின்
   வலைதன்னில் மிகமிக இளையோன் நானே!
தந்தார்கள் பரிசதரும் வாய்பு தானே-இத்
   தரணியில் வாழும்வரை மகிழ நானே!

              புலவர் சா இராமாநுசம்
  
  


  


Sunday, May 20, 2012

இன்றுப் பதிவர்கள் சந்திப்பும் என் வேண்டுகோளும்


விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பீர்-உம்
    சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
    ஏற்றவழி உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகையுடன் செப்ப வேண்டும்!-மேலும்
    செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!

                                       புலவர் சா இராமாநுசம்

Friday, May 18, 2012

மே- பதினெட்டே!


              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
              தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே!
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக!
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்!

               உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
                   ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி!
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்!
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்!

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல!
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
                   குடும்பமே அழிந்த நாளன்றோ!?
               புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே!
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்!

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே!
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே!
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே!
              தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

                                                புலவர் சா இராமாநுசம்

Thursday, May 17, 2012

விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா வேரற்று வீழ்ந்திட விடுவீரா!



சென்றப் பதிவில் மாற்றமே
  செய்தேன் பாரும்! தோற்றமே!
என்றும் எழுதுவேன் விருத்தமே
  எழுதினேன் வெண்பா திருத்தமே!

பலரும் அதனை அறியவில்லை
   பதிலில்! ஏனோ? தெரியவில்லை!
சிலரில் ஒருவரே வெண்பாவே
   செப்பினார்! அருணா ஒண்பாவே!

மாற்றம் வேண்டி மாற்றியதே
  மனமே வெண்பா சாற்றியதே!
ஏற்பதோ உங்கள் கையில்தான்
  எழுதுவேன் மேலும் பொய்யில்தான்!

முன்பே சிலபேர் கேட்டார்கள்
   மொழிந்திட வெண்பா பாட்டாக!
அன்பரே பிடித்தால் கொள்ளுங்கள்
    அல்லது என்றால் தள்ளுங்கள்!

செப்பிடின் வெண்பா எளிதல்ல
   செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
   ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!

எழுதுவேன் மேலும் சிலவற்றை
   என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
   வேரற்று வீழ்ந்திட விடுவீரா!

             புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 15, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!


எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...