Tuesday, March 17, 2015

கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும் காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!



கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

Monday, March 16, 2015

வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும் வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!



வந்துவிட்டது வந்துவிட்டது எந்தன் வலையே-நாளும்
வலைச்சித்தர் தனபாலும் முயன்ற நிலையே!
நொந்துவிட்டேன் நொந்துவிட்டேன் அந்தோ பலநாள்-ஏதும்
நோக்கமின்றி வெற்றிடமாய் உள்ளம் சிலநாள்!
பந்துபட்டப் பாடாக மனமே துள்ள-மேலும்
பகலிரவு பேதமின்றி வருத்தம் கொள்ள!
தந்துவிட்டேன் பலருக்கும் தொல்லை வீணே-என்றும்
தருவீர்கள் ஆதரவு வாழ நானே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, March 15, 2015

முகநூல் துணுக்குள்- பகுதி இரண்டு!





உடல் அழுக்கைப் போக்க நீரைப் பயன் படுத்துகிறோம் !உடல் சுத்தமாகிறது! கூடவே ஒரு சுகமும் கிடைக்கிறது ! அது போல உள்ள அழுக்கைப் போக்க, உள்ளமும் நல்ல குணங்களில் மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்! அதனால் வரும் இன்பம் தான் நிலையான நிம்மதியைத் தரும்

நன்கு படிப்பதனால் அறிவு வரலாம்!ஆனால் ஒழுக்கம் வந்து விடாது
விளக்கை ஏற்றினால் வீட்டில் வெளிச்சம் வர, இருள் போகுமே தவிர வீடு தூய்மை ஆகிவிடுமா !? கண்ணுக்குத் தெரியும் குப்பைக்களை அகற்ற கூட்டி பெருக்கத்தானே வேண்டும்! விளக்கு ,வெளிச்சத்தில் குப்பைகள் கண்ணுக்குத் தெரிவது போல நாம் கற்ற அறிவாகிய விளக்கு வெளிச்சத்தில் சமுதாய வீட்டில் காணப்படும் ஒழுங்கீனங்களை முற்றும் நீக்கி நாம் , நம்முடைய ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்!


விண்ணிலிருந்து வீழ்கின்ற மழைத்துளி போல, ஏதும் கலப்படமற்ற தூய நீரைப் போன்றவர்கள் குழந்தைகள்! மழைத்துளி தான் வந்து விழுகின்ற இடத்திற்கேற்ப மாறுபடுவது போல குழந்தைகளும் தான் வாழும், வளரும் சூழ்நிலைகேற்ப நல்லராகவோ, கெட்டவராகவோ ஆவார்கள் என்பதைப் பெற்றவர்கள் உணர்ந்து
தம் ,குழந்தைகளை வளர்ப்பது நன்று!

புலவர் சா இராமாநுசம்

Saturday, March 14, 2015

அன்பின் இனிய உறவுகளே! ஓர் அறிவுப்பு !





அன்பின்  இனிய  உறவுகளே!
       ஓர்  அறிவுப்பு !
கடந்த  சில  நாட்களாக  என்னுடைய வலை  முகவரியான pulvarkural.info என்பது தடை பட்டுள்ளது  பலவகையில்  முயன்றும்  இன்றுவரை சரிசெய்ய  இயலவில்லை! அதன்  பின்னர்
நண்பர்  திண்டுக்கல் தனபால்  அவர்களின்  உதவியால், என்  பழைய
  http://www.pulavarkural.blogspot.com/என்பதைக்  கொண்டு  தற்போது  வெளிவருகிறது !ஆகவேதான்  பலருடைய  வலைப்பதிவில் என்னுடைய  புதிய பதிவுகள் தெரியவில்லை பலரும்  இதுபற்றி
கேட்பதால் இங்கே விளக்கம்  தந்துள்ளேன் விருப்பம்  உள்ளவர்கள்
தங்கள் வலையில் http://www.pulavarkural.blogspot.com/ என  மாற்றிக் கொண்டால் ஒரு  வேளை  தெரியலாம்.மேலும் , உதவிய  தனபாலுக்கும் இதன் மூலம்  நன்றி,
தெரிவித்துக்  கொள்கிறேன். ஏற்பட்ட  இடையூறுக்கு  வருந்துகிறேன்
   
புலவர் சா இராமாநுசம்

Friday, March 13, 2015

முகநூல் தந்த துணுக்குகள்!




தாயின் அன்பு கடல் போன்றது! எப்படியென்றால் காவிரியின் நீரை ஏற்றும் கொள்ளும் கடல் கூவம் ஆற்று நீரை வேண்டாமென்றா தள்ளி விடுகிறது! இல்லையே! அதுபோல தான் பெற்ற மக்களில் ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் தாயுக்கு மட்டுமே உண்டு!

இன்று, அரசியல் ஒரு தொழிலாகி விட்டது! இதற்கு முதலோ, உழைப்போ தேவையில்லை! பணத்தைத் தேடவேண்டிய அவசியம் கூட இல்லை! அது தானேத் தேடிவரும்!அரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன! இது எங்கு போய் முடியுமோ!!!?

உறவுகளே!
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பதே பெரும் பாலும் இல்லாமல் போய்விட்டது! எனவே ,குடும்பத்தில் வாழ்வோர் எண்ணிக்கை சுருங்கி விட்டது! குடும்பம் என்பதே ஒருவர் கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதை குடும்பத்தில் உள்ளவர் உணரவேண்டும்! தேவை வரும்போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் இல்லம் அமைதி காணும்

பணக்காரன் பக்கம்தான் ஊரும் செல்கிறது என்பது உண்மைதானே!
அதனால்தான் அவர்கள் எதையும் செய்வற்கு அஞ்சுவதோ, வெட்கப் படுவதோ அறவே இல்லை

                    புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 10, 2015

உலகப் பெண்கள் தினம்!

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையெங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்        மீள் பதிவு

Sunday, March 8, 2015

திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர் தினமான இன்றிதனைப் போற்ற வேணும்!


அர்த்தநாரி ஆண்டவனே உடலைத் தந்தான் –எதற்கு????
ஆய்வதற்கா!?! அவதாரம் எடுத்து வந்தான்
சரிபாதி பெண்களென உணர்த்தத் தானே –இதனை
சரியாகப் புரிதலில்லா ஆண்கள் வீணே!
மறுபாதி பெண்களென உரிமைத் தருவீர்-வாழ்வில்
மட்டற்ற மகிழ்வினையே என்றும் பெறுவீர்
திருவாகி இவ்வுலகே ஏற்றம் காணும் –மகளிர்
தினமான இன்றிதனைப் போற்ற வேணும்


தோன்றியநாள் முதலாக அடிமை யாக்கி –வாழத்
துணையாக வந்தவளின் துயரைப் போக்கி
சான்றெனவே ஆண்மக்கள் விளங்க யாண்டும்- எதிலும்
சமபங்குப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்
ஊன்றுக்கோல் ஒருவர்க்கு ஒருவர் ஆமே –என்ற
உண்மைதனை இருவருமே உணர்ந்து தாமே
ஆன்றோரின் அறவழியே நடந்து வாழ்க!-மகளிர்
அனைவருக்கும் என்றென்றும் இன்பம் சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...