Saturday, July 18, 2015

மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!



மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று
மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!
அதுவே அதுவே டாஸ்மாக் அதுவே-ஐயம்
அணுவும் இல்லை உண்மை இதுவே!

குடியை ஒழிக்கும் கொள்கை ஒன்றே-பலரும்
குறிக்கோள் ஆமென சொல்வார் இன்றே!
விடிவே வருமா! தேர்தல் வருதே –மதுவினை
விலக்கிட சட்டம் மீண்டும் தருமா!

வாக்கினை அளிக்க வரிசையில் நின்றும்-பணம்
வழங்கிய கட்சிக்கு அளித்திடச் சென்றும்!
போக்கினை மக்கள மாற்றினால் போதும்-அவரே
புரிந்து தெளியின், போமே ஏதம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 16, 2015

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை!
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே!
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்!
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்!
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்ளுவரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்!
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே!
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே!
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 14, 2015

இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ் இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!



இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ்
இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!
அசைந்தாடும் செடிகொடிகள் மயங்கிப்போக-அவர்
அமைத்திட்ட இசையாலே அமைதியாக!
திசைஎட்டும் கொடிகட்டி பரவபுகழே –காது
தித்திக்க தெவிட்டாது என்றும் திகழ!
வசையேதும் இல்லாது புனிதரவரே-இசை
வரலாற்றில் நிகராக இருப்பதெவரே!


புலவர் சா இராமாநுசம்

Monday, July 13, 2015

ஆதாரம் ஆனது வலையே ஆகும் – எந்தன் ஆயுளை வளர்ப்பதும் உண்மையாகும்!



ஏதேதோ எண்ணங்கள் இரவு முழுதும்-நெஞ்சில்
எழுந்துவர உறக்கமில்லை! விடிய! பொழுதும்!
தீதேதும் இல்லாமல் நாளும் கழிய –இறையைத்
தொழுதபடி எழுந்துவர இருளும் அழிய!
மாதேதும் இல்லாத மனையைப் போன்றே-எந்தன்
மனந்தனில் வெறுமையாம் உணர்வுத் தோன்ற
ஆதாரம் அற்றுப்போய் நிற்கும் மரமாய்-நானும்
ஆனேனோ!? அறியேனே! சொல்ல! தரமாய்!


வாழ்கின்ற நாள்வரையில் தொல்லை யின்றி-காத்து
வருகின்ற மகளுக்கு செய்யும் நன்றி!
வீழ்கின்ற நாள்வரையில் அமைய வேண்டும்-இதுவே
வேண்டுதல்! ஆண்டவ! அறிவாய் ஈண்டும்!
சூழ்கின்ற கவலைகள் விலகிப் போக-காலைச்
சுடர்கண்ட பனியாக முற்றும் ஆக!
ஆதாரம் ஆனது வலையே ஆகும் – எந்தன்
ஆயுளை வளர்ப்பதும் உண்மையாகும்!

புலவர் சா இராமாநுசம்

Saturday, July 11, 2015

பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!



பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு
பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!
ஓருங்கள் இனியேனும் மதுவை நீக்க- என்ன
உரியவழி ! காணுங்கள்! தீமைப் போக்க!
கூறுங்கள் மேலுமிது வளர்தல் நன்றா-தாயாம்
குலத்திற்கே மாசாகும்! தீரும் ஒன்றா!?
மாறுங்கள்! மதுவிலக்கு கொள்கை தன்னில்- நீங்கள்
மனம்வைத்தால் நடந்துவிடும்! உண்மை எண்ணில்!


எதிர்கால சந்ததியர் வாழ வேண்டும் –இன்று
எடுக்கின்ற முடிவாலே நாட்டில் மீண்டும்!
சதிராடும் மதுவெறியே முற்றும் போகும்-வரும்
சரித்திரத்தில் உம்பெயரே நிலையாய் ஆகும்!
நிதிவேறு வழிதனிலே தேடிக் கொள்வீர –நீங்கள்
நினைத்தாலே போதுமது !முடியும் ! வெல்வீர்!
மதிமாறும் மதுவாலே மனிதக் கூட்டம்- அன்னார்
மனம்மாறிக் கொள்வாரே குடும்ப நாட்டம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 9, 2015

எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர் எறியும் குப்பைத் தன்னாலே


எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர்
எறியும் குப்பைத் தன்னாலே
அங்குமிங்கும் சிதறி விடும்- மேலும்
அதனால் தெருவே மாசுபடும்
தங்கும் குப்பையோ மலையாகும்- நாளும்
தவறாது எடுப்பதோ இலையாகும்
பொங்கும் நாற்றம் மேயரய்யா – உடன்
போக்குவீர் குறையை வணக்கமய்யா


புலவர் சா இராமாநுசம்

Monday, July 6, 2015

எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான் எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை



எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான்
எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை-இன்று
தொழுகின்றேன் உறவுகளே உம்மை எல்லாம் –மேலும்
தொடர்வீரே! மறுமொழியாய் நாளும் பல்லாம்-ஏதும்
வழுவாக எச்செயலும் செய்தேன் இல்லை –நன்மை
வருமென்று மாற்றார்க்கும் தாரேன் தொல்லை-நொந்து
அழுவர்க்கும் உதவுகின்ற குணமும் கொண்டேன் –என்னை
அறிந்தார்கும் இதுதெரியும்! உண்மை! விண்டேன்!


எத்தனையோ கற்பனைகள் நெஞ்சில் எழுமே –முதுமை
எழுதிவிட தடைபோடும் உள்ளம் அழுமே-நானும்
புத்தனல்ல ஆசைகளை அடக்க இயலா –மனம்
போதிமரம் அல்லயிது! பொங்கும் புயலா?-நாளும்
சித்தமெனும் கடல்தன்னில் அடிக்கும் அலையா?-வானில்
சிறகடித்து பறக்கின்ற பறவை நிலையா?-அறியேனாக
(இவை)
அத்தனையும் தாண்டித்தான் எழுது கின்றேன் –உம்மோர்
அன்பாலே வலிமறந்து நாளும் வென்றேன்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...