Wednesday, February 1, 2017

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்



மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
   தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

Monday, January 30, 2017

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும்!


ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென


புலவர்  சா  இராமாநுசம்

Friday, January 27, 2017

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே



காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!


கொட்டும் மழையே என்றாலும்-கடும்
குளிரைப் பனியே தந்தாலும்
திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும்
தீவிரம் ஆக்கும் மறவோரே
இட்டம் பேல நடவாமல்-அறத்தின்
எல்லை தான்னைக் கடக்காமல்
கட்டுப் பாடய் நடக்கின்றீர்!-கடமை
கண்ணியம் பேணிக் காக்கின்றீர்


புலவர் சா இராமாநுசம்

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?



புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில்
புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே
சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர்
சாவியே! உழவன்தன் குடும்பம் அழுதும்
நித்திரை கலையாத அரசுகளே ஆள-அந்த
நிலைகண்டு தாளாத பல்லுயிர் மாள
இத்தரை தன்னில் நாம்காணும் காட்சி-ஏக
இந்தியா என்பதின் மாண்புறு மாட்சி!


புலவர் சா இராமாநுசம்

போகி விழா கவிதை!



வேண்டாத பொருள்களையே வீட்டை விட்டே
வீசியதை விடிகாலை அனலில் இட்டே!
ஆண்டாண்டு காலமாக போகி என்றே
அழைத்திட்ட உழவனவன் அழுது இன்றே
பூண்டோடு பூண்டாக பயிரும் மாய!
பசியோடு இல்லத்தில் வயிரும் காய
கூண்டோடு அழிவானோ தெரிய வில்லை!
குடும்பத்தில்! துயருக்கு எதுதான் எல்லை!?


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...