Friday, December 22, 2017

மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும் மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்!

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்


புலவர் சா இராமாநுசம்

Monday, December 18, 2017

எருமாட்டின் மீதுமழைப் பெய்தல் போல- ஏன் இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!



எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணமிட இடைத்தேர்தல் தன்னில் சென்றே
பங்காற்ற அமைசர்களோ கொடுமை  காணீர்-ஏழைப் 
  படும்துயரை சொல்லியழும் கண்ணீர்  பாரீர்
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தல்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  நிலமை-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  வளமை
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியே புயாலய்
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!
 
அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!
                            புலவர்  சா இராமாநுசம்

Friday, December 15, 2017

எதிலும் தெளிவே காணோம்!-விலை ஏற்றம் உயர்வே! நாணோம்!




போகப் போகத் தெரியும் –தாமரைப்
பூவின் வாசம் புரியும்
ஏகம் இந்தியா என்றே- நிலை,
இருக்குமா ! இல்லையா !நன்றே!
சோகம் தீரும் என்றார்!-உறுதி
சொல்லி அவரும் நின்றார்!
தாகம் தீர வில்லை-மேலும்
தருவ தென்னவோ தெல்லை!

பானை சோறு பதமே- நாம்
பார்கு மந்த விதமே
ஆன தய்ய நன்றே!-நடக்கும்
ஆட்சி முறையும் இன்றே!
போன போக்கு போன்றே-நீரும்
போவ தேனோ இன்றே
கானல் நீரா ஐய்யா-மக்கள்
கண்ட கனவு பொய்யா

எதிலும் தெளிவே காணோம்!-விலை
ஏற்றம் உயர்வே! நாணோம்!
பதிலும் முறையாய் இல்லை-போகும்
பாதை நீங்காத் தொல்லை!
மதில்மேல் பூனை ஆக- மக்கள்
மனமே மயங்கிப் போக,
விதியே இதுதான் போலும்-என்ற
வேதனை நாளும் மூளும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, December 11, 2017

முகநூலில் வந்தன!



ஒக்கி’ புயலில் சிக்கி குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தில் மட்டும் 36 மீனவர்கள் இறந்துள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தி அறிந்து
உள்ளம் மிகவும் வருந்துகிறது அவர்கள் ஆன்மா
சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் உடனடியாக அரசு அவர்கள் குடும்பம் நலமுற வாழ ஆவன செய்ய வேண்டுகிறோம்

ஓகி புயலால் மராட்டியத்தில் தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு கேரள அரசு உதவி!-செய்தி!ஆனால் தமிழக அரசோ இங்கே இடைத்
தேர்தலில் , தாரை தப்பட்டை ஒலிக்க ஒட்டு வேட்டை ஆடுகிறது இதைவிட கேவலம் உண்டா

உறவுகளே!
சன் டி வி ஒளிபரப்பும் இரண்டு தொடர்களுக்கு(விநாயகர், அழகு) பரிசு தினமும் ஆயிரம் நேயர்களுக்கு தருவதாக ஒலிபரப்புவதை அறிவீர்கள்! ஆனால் இதுவரை யாரும் பெற்றதாகத்
தெரியவில்லை! உங்களில் யாரேனும் பெற்றிருந்தால் இங்கே குறிப்பிட வேண்டுகிறேன்

ஆசை என்பது அளவற்றது !
நடந்து போறவன் சைக்கில்
வாங்க ஆசைப்படுவான் சைக்கில் போறவன் மோட்டார் சைக்கில் வாங்க ஆசைப்படுவான் மோட்டார் சைக்கில்காரன் கார் வாங்க ஆசைப்படுவான் ! இதுபோலத்தான் அனைத்தும்
ஆசை என்பது ஒரு மெகாத் தொடரைப் போல வளர்ந்து கொண்டே போகும்!

நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு நல்லதே! அதனால்
அவருக்கு மிகப் பெரிய விளம்பரத்தை, ஆளும் அரசு
தேடிக் கொடுத்துள்ளது !அவரை நிற்க விட்டிருந்தால்
பத்தோடு ஒன்றாக ஆகி யிருப்பார்

உறவுகளே!
முகநூலில் சில(ஆண்,பெண்) பதிவர்கள் தங்கள் பதிவுகளோடு தங்கள்
புகைப் படங்களையும் பெரும்பாலும் வெளியிட்டு கொள்வது தேவைதான என்பதை அன்புகூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்

நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தவறுமட்டுமல்லஅதில் ,மத்திய,மாநில அரசுகளின் சதியும் அடங்கியுள்ளதது என்பதும் ஆகும்! மேலும் ஆளும் கட்சி வெற்றி பெற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படும்!

உறவுகளே
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பது போல
ஆர் -கே நகர் தேர்தலில் யாரோ நடிகர் விஷாலை போட்டுயிட வைத்துள்ளார்கள்! பார்ப்போம்!

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொலையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே  கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன்  வாயின்னே

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 5, 2017

எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!



எங்கே போனாய் நிம்மதியே-உனையே
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நானும்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-பட்ட
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீயும்
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என்றே
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அன்னார்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வியே
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீயும்
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்றே
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருளே
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

Sunday, December 3, 2017

அன்பின் இனிய வலையுலக உறவுகளே!





அன்பின் இனிய வலையுலக உறவுகளே!
         வணக்கம் கணகில!
   வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய  நான் உங்கள் பார்வைக்கு
பணிவன்போடு வைக்கும் ஒருசில கருத்துகள்!
   இன்றைய  வலையுலகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என்பது , என்
கருத்து! இனம் காணமுடியாத ஒருவகைப்  போட்டி ,மனப்பான்மை உள்ளுக்குள் உருவாகி வருகிறது! இதனைக்  கூர்ந்து பார்தால்  உண்மை தெரியும்  மேலும் அதிகம் விளக்கினால் அதுவே தீமை தரலாம்
     ஆனால் ஒன்றை இங்கே அழுத்தமாக செல்வதெனில் அதற்கு!!!!!!!
    காரணம் தமிழ்மணத்தில் வைக்கப் பட்டுள்ள ரேங்குப் பட்டியலும்
மதிப்பெண்  பட்டையும்தான் என்பது  தெளிவாகத் தெரிகிறது
    என்னுடைய ரேங் பனிரெண்டில் இருந்த போதும் நான் கவலைப் பட்டதில்லை இன்று நான்கில் இருப்பது  கண்டு மகிழவும்  இல்லை
     அது மட்டுமல்ல,!வலைப்பதி ஆனாலும் ,முகநூல் ஆனாலும் என்
கருத்துகளை எழுதுவதில்  மட்டுமே நான் கருத்தாக இருப்பேன்
      இன்று  வலைப்பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்
சுருங்கி விட்டது என்பது பலரும் அறிந்த உண்மை!
      உள்ள சிலரும் விலகி செல்லாமல் இருக்க வழிகாண வேண்டும்
      சிந்திப்போம் செயல்படுத்துவோம்!
         உங்கள்  கருதென்ன!!!?
புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...