Thursday, December 15, 2011

முந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்!



அன்பர்களே!
          முந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய
விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்
           இன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது
வதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி
இருப்பதால் திங்களன்று எழுதுகிறேன்
    அதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்
         முந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்
குறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட
தாகக் கருதுவதுபோல் ஐயப்படுகிறேன்! எந்த மாவட்டமானாலும்
யார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்
         மேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்
காலிகமே! அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே
ஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்
அல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்
சேர்ந்த  பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே
அதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்
          உடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்
காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்
இந்த தற்காலிக அமைப்புத்  தேவையாகும்!
         எந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்
என்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது
பதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை
தானே,பக்கத்துப்பக்க  மாவட்டங்களே போதுமே சற்று
தூரமிருந்து  வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்
     
         ஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே!
மனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
எத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக
எனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்
ஏற்பாடு செய்ய இயலும்
         ஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்
பதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
உறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்
      நான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை
எதிர் பார்க்கிறேன்!
                நன்றி!            அன்பன்
                            புலவர் சா இராமாநுசம்
                                          வணக்கம்  

       தொலைபேசி -24801690  செல் -9094766822
                              

Wednesday, December 14, 2011

இனிய வலைப் பதிவு அன்பர்களே!



இனிய வலைப் பதிவு அன்பர்களே!
                               வணக்கம்!

      நமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை
என்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,
 ஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி
அளித்துள்ளீர்கள்
       உங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
        தனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்
செய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
    எனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
சிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது
பொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக
 இயலாத ஒன்று  என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்
கொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்
செய்யத்தயாராக உள்ளேன்
      ஆனால் சங்கத்தைப் பதிவு  செய்யும் வரை வேண்டிய
முன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்!
     முதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே
தருகிறேன்
       சட்டப்படி  சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து
இருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்
 அதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்
ஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து
 அவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்
உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்
        இது, முதல் பணி!
அடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு
ஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி!
       முதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு
இரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்
         முதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்!
 
1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.
  2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்

இதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை
செங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட
வலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது
இடத்தில் கூட்டி  கலந்தாய்வு செய்து மேற்
கண்ட தற்காலிகப் பொறுப்பாளர்களை
 தேர்வு செய்து பதிவு செய்யலாம்
    
        இதற்கான பணிகளை நான் செய்கிறேன்!
இக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்
உங்கள் கருத்துக்களை உடன் முன்போல்
மறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்!
                        அன்பன்
               புலவர் சா இராமாநுசம்


      
    

Monday, December 12, 2011

எழுவாய்த் தமிழா எழுவாயா...?


எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்


 

Saturday, December 10, 2011

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?



  பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
                            
                                     அன்பன்
                       புலவர் சா இராமாநுசம்
        

       

Friday, December 9, 2011

விலையைக் குறைப்பீர் ஆள்வோரே



அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
   அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
   வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
   தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
   உணர்ந்த ஞானி அன்னாரே

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, December 8, 2011

நானா நீயா பாரென்றே



 நானா நீயா பாரென்றே
     நடத்திய மத்திய அரசின்றே
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார்

முடங்கிப் போனதே அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்
 அடங்கிப் போனதே பலனென்ன
     அழிந்ததுப் பணமே கோடியன்ன
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்து தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

Tuesday, December 6, 2011

வலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்!



   இனிய அன்பு நெஞ்சங்களே!
                  முதற்கண், உங்கள் அனைவருக்கும் என் பணிவான
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
            இதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை
நூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்
            விரைவில் வெளிவர இருக்கிறது தேதி முடிவானதும்
அறிவிக்கப்படும்!
         மேலும் வெளிவர இருக்கின்ற நூலில் சிலப் பக்கங்களை
ஒதிக்கி என் கவிதைகளைப் பற்றிய உங்கள் சிறப்பான கருத்துக்களை
யும் வெளியிட விரும்புகிறேன்.
         எனவே, இனிய நெஞ்சங்களே, இப்பதிவின் கீழே தங்கள்
கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்
        கருத்துக்கள் பொதுவானதாக,இரண்டு மூன்று வரிகளில்
அமையுமாறு இருத்தல் நலமென்று மிகப் பணிவன்போடுத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
       அதில் தங்கள் வலைப்பெயர் உள்நாடுஎனில் ஊரும்
 வெளிநாடு எனில்,நாட்டின் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன்
அதை அப்படியே படி எடுத்து வெளியிடுவேன்
                
                      நன்றி!
                                   அன்புடன்
                             புலவர் சா இராமாநுசம்
                   
      
           



 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...