Saturday, May 5, 2012

ஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை


ஈழம் ஒன்றே என்னாசை-என்
   இதயம் முழங்கும் நல்லோசை!
வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
   வந்திடுட வேண்டும் விடிவுக்கே!
சூழல் விரைவில் வந்திடுமா-ஈழம்
   சுதந்திரம் பெற்றுத் தந்திடுமா?
பாழும் மனமே! கலங்காதே!-சிங்கள,
   பாவியின் குலமும் விளங்காதே!

கண்டனம் செய்தால் போதாது-அந்த
   கயவர்கள் திருந்துதல் ஆகாது!
தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
   தமிழரின் வாழ்வே எரியாகும்!
சண்டை முடிந்தும் மூன்றாண்டே-அங்கே
    சாவாதே மேலென மனந்தூண்ட
குண்டர்கள் ஆடசி மாறாதே-அவர்
   கொடுமைக்கு இன்றும் அளவேதே!

முள்ளின் வேலிக்குள் கிடக்கின்றார்-அவர்
   முடங்கி அடங்கியே நடக்கின்றார்!
உள்ளிட வேண்டும் ஐ.நா வே-உடன்
   உலகம் உணர்ந்திடச் செய்வாயே!
கள்ளிப் பாலும் பசும்பாலாய்-பக்சே
   கள்ளனின் நாடகம் சிலநாளே!
வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
   வெற்றிச் சங்கும் ஊதிடுமே!

                                 புலவர் சா இராமாநுசம்
 

   
  

Thursday, May 3, 2012

பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!



உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!

வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!

அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!

உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!

ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!

எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!

                         புலவர் சா இராமாநுசம்
  



Wednesday, May 2, 2012

இரத்தம் சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!


ஒலிக்கிறது தனிஈழம்  தீர்வா மென்றே-ஆனால்
   ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
   கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!

சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
    சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
    வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
   உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
    கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!

நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
   நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
   திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!

ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
   ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
   பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!

குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
    குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
    சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!

                   புலவர் சா இராமாநுசம்


  

Tuesday, May 1, 2012

வருக வருக மேதினமே!


சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 


Sunday, April 29, 2012

என்றும், கோழையாய் இருந்தே பலியானோம்!


கோடை வெயில் தொடங்கியதே-அதன்
   கொடுமையில் தெருவே முடங்கியதே!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
   அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
   குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, அடடா! படுவேகம்-அவர்
   நடப்பதைக் காணின் படுசோகம்!

வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
   வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
   கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
   சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
   கேள்விக்குக் காலம் பதில்தருமா?

ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
   ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
   துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
   வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
   கோழையாய் இருந்தே பலியானோம்!

             புலவர் சா இராமாநுசம்





Friday, April 27, 2012

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
   அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
   மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
   பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
    தினமும் காத்து வளர்தவர் ஆமே!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
   ஆன்றோர் கூறிய மூதுரை, இன்று!
சீலமாய் எண்ணி செயல்படின் நன்மை
   செப்பவும் வேண்டுமா? வருவது உண்மை!
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும்
    கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
    நம்பியே எதையும் செய்திடமுயலே!

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
   ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
   வாழ்வில் அமைதி  வழியெனச் செல்வர்!
நோய்நொடி இன்றே நேர்வழி சென்றே
   நொந்தவர் துயரம் போக்கிட நன்றே!
தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
   தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!


             புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 25, 2012

உன்னெழில் வாழ்வுக்கு உரமே!


    
சினமது சேர்ந்தாரைக் கொல்லி!-என
  செப்பிய குறள்தன்னை உள்ளி!
இனமது காத்திட வேண்டும்-நல்
  இன்பமேப் பூத்திட யாண்டும்!
மனமது வைத்தாலே போதும்-பொது
  மறையது சொல்வது யாதும்!
தினமது எண்ணியே வாழ்வீர்-சினம்
   தேவையா?ஆய்வாக சூழ்வீர்!

செல்லிடம் காப்பதே! சினமும்-என
   சிந்தித்துச் செயல்பட! மனமும்!
அல்லிடம் காப்பதா!? அன்றே!-இதை
   அறிவது அனைவரும் நன்றே!
பல்லிடம் நஞ்சினை வைத்தே-நல்
    பாம்பென பகைகொண்டுக் கொத்த!
இல்லிடம் நெஞ்சிலே! சினமே-முடிவு
    எடுத்தாலே வாழ்வீரக் கணமே!

தன்னையே தான்காக்க எவரும்-சினம்
    தன்னையே காத்திடின் அவரும்!
நன்னலம் காண்பரே என்றும்-வாழ்வில்
    நடந்திடின் அறிவரே இன்றும்!
பொன்நிகர் வள்ளுவன் குறளே-எடுத்து
    போதிக்கும் வழிதேடி வரலே!
உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
   உணர்தலே நாம்பெற்ற வரமே!

                                 புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...