Wednesday, January 30, 2013

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை !


நேற்றே வந்திருக்க வேண்டிய கவிதை தாமதத்திற்கு மன்னிக்க

இன்று நினைவு நாள் அஞ்சலி

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


           மீள்பதிவு

Tuesday, January 29, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!




ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
              
                    புலவர் சா இராமாநுசம்
      
       

Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!




ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!

தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?


ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!

                                            புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!




       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!





ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு! 
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல 
பண்பை என்றும் நீநாடு! 
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் 
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு 
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற 
கொள்கையைக் காக்க தயங்காதே! 

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு 
எண்ணி எதையும் செய்வாயே! 
செயற்கையைத் தேடி அலையாதே-நம் 
செந்தமிழ் பேச மறக்காதே! 
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ 
முயன்றால் வெற்றி அவ்வினையாம் 
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே 
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே! 

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது 
உரிமைக்கு வந்தால் போராடு! 
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர் 
ஏய்க வந்தால் நீசாடு 
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில் 
என்றும் வாரா ஒருகேடு 
செவ்வழி இவையே நலங்காண-பிறர் 
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
   

Thursday, January 17, 2013

அணிந்துரை.! கவியாழி கண்ணதாசனின் நூலுக்கு!


                                 அருமை  நண்பர்  கவியாழி கண்ணதாசனின்
அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும்  தருவாயா  என்ற  நூலுக்கு
 நான்  எழுதிய   அணிந்துரை.






புலவர் சா இராமாநுசம்  
புலவர் குரல் வலைப்பதிவு
மதிப்பியல் தலைவர்
தமிழகத் தமிழாரிரியர் கழகம்


              இக்கவிதை  நூலின் ஆசிரியர், என இனிய நண்பர்  கவியாழி கண்ணதாசன் அவர்கள் கவிதைகள் எழுதுவதில் காட்டுகின்ற ஆர்வம்
என்னை மிகவும் வியப்படையச் செய்யும்

          இன்றைய வலையுலகில் ,  மிக மிக குறுகியகாலத்தில், தன்
பெயரிலேயே , ஒரு வலைப்பதிவினைத் தொடங்கி, இவ்வாறு நூல்
வெளியிடும்  அளவிற்கு பல கவிதைகளைப் படைத்த ஆற்றலைக்
கண்டு நான் மெத்தவும் மகிழ்வதோடு பெரிதும் பாராட்டவும் கடமைப்
பட்டுள்ளேன்.

           மரபுக் கவிதைள்  எழுதுவது கடினம் என்ற நிலையில் இன்று
புதுக்கவிதைகள்  எழுதுவோர் எண்ணிக்கையில்  அதிகரித்து விட்டனர்
என்பது மறுக்க இயலாத உண்மை. அவ்வரிசையிலே ஒருவர்தான் நண்பர்
கண்ணதாசன். இவரது  ஆர்வமும், ஆற்றலும் மேலும், மேலும் வளரும்
என்பதிலே எனக்கு ஏதும் ஐயமில்லை

          எனவே அவர் எழுதியுள்ள கவிதைகளில், சில இடங்களில்
உள்ள, சில வரிகளை இங்கே, சுட்டிக் காட்ட  விரும்புகிறேன்.

        சாதி(தீ) என்ற கவிதையில் அவர் சாதி மத பேதங்களை
மிகவும் சாடியதோடு

        மனிதத்தைப் போற்றினால்
        மதமென்ன தடையாசொல்லும்  
என்று கேட்கும் கேள்வி அனைவரும்    சிந்திக்கத் தக்கது

        தமிழை மணந்து  என்ற  தலைப்பில அவர் எழுதியுள்ள
கவிதையில் காணப்படும் அவரது தன்னடக்கப் பண்பும், தன் கவிதைகளைப்
படித்து, மறுமொழி இடும் வலையுலக உறவுகள்பால் அவர் கொண்டுள்ள
பற்றும் பாசமும் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

        சமுதாய தொண்டு என்ற நோக்கோடு பல கவிதைகள்  எழுதியுள்ளார்
அவற்றில் குறிப்பிட தக்கன....
      
        உடல் தானம் செய்வீர், கல்வி (காசுபார்போரின்)கடவுள், ஆயுத பூசை
மகிழ்ச்சியா நிகழ்ச்சியா, போன்ற கவிதைகளைப் படித்து சுவைக்கலாம்
         மேலும், காதல் சுவை சொட்ட  இவர் எழுதியுள்ள கவிதைகள், நூலில் பலவற்றை  நீங்கள் படித்து  மகிழலாம் 

        சுருக்கமாகச் சொன்னால்,  இவர் தன்னுடைய பெயரைக் கண்ணதாசன் என்பதை விட கவிதை தாசன்  என்று வைத்துக் கொண்டால்
கூட  பொருத்தமானதே என்பது என்கருத்து
       
       முடிவாக இவரது ஆற்றல் வளரவும்  ஆர்வம் பெருகவும்  எல்லாம்
வல்ல வேங்கடவனை வணங்கி வாழ்க என வாழ்த்துகிறேன்
                                                              புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 15, 2013

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!




மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
              

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...