Saturday, June 27, 2015

ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


ஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே
ஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்
யாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்
யாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்
பாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்
பத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்
ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய
ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


புலவர் சா இராமாநுசம்

Friday, June 26, 2015

இல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!



எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
எழுப்பிய பின்னர் அழுவாயா!
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்!
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
துணையால் நடப்பதே இக்கேடே!
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
கண்டவர் புத்தி மாறட்டும்!


முல்லைப் பெரியார் அணைமட்டும்-கேரள
மூடர்கள் கை யால் உடையட்டும்!
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
ஏக இந்தியா உடைந்திடுமே!
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
துடிப்புடன் விரைந்து தடுப்பீரே!
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 24, 2015

அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்!



எதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ
எண்ணுவதோ ? எவர்வரினும் ஆள இன்றே!
இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்
ஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்!
புதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய
போக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்!
அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக
அவலங்கள் ஐயகோ என்று மாறும்!


புலவர் சா இராமாநுசம்

Monday, June 22, 2015

இனிய உறவுகளே! வணக்கம்!


இனிய உறவுகளே! வணக்கம்!
நேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா
அவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்
www.vazhvuneri.blogspot.com

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, June 20, 2015

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!



பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க!


எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்கப் பண்ணிரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 18, 2015

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே!



ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும்
எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாதா விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை வருத்திட இந்ததொல்லை


பகல்கொள்ளை படுகொலை பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன் வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதோ காடாக! மாற லாச்சே!-மேலும்
மழையில்லை! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுற, விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையர் அன்னாரைக் காக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 16, 2015

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது !



கோடிகளில் ஊழல் செய்து .தப்பி ஓடி வெளிநாட்டில் .தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப் பட்ட கேடிகளுக்குக் காட்டப்படும் மனிதநேயம், இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் முதலானோர் குற்றம் சாட்டி ,துக்குத் தண்டனை பெற்று பின் ஆயுள் தண்டணையாக மாற அதற்குரிய காலத்தை அவர்கள் அனுபவித்து ஆண்டுகள் கடந்தும், கருணை அடிப்படையில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்த பின்பும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருப்பதற்கு பெயர் என்ன!

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது ! அருள் கூர்ந்து அதனை இழிவு படுத்தாதீர்கள்
என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...