கண்ணே இழந்து போனாலும்
-வாழக்
கருதியே உறுதியாய்
இருந்தவளே!
பெண்ணே இறந்து போனாயே
-காமப்
பேயனால் இந்நிலை
ஆனாயே!
காதல்
கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம்
கன்னியர் பலரும்
கருகிவிட்டார்!
வேதனை நடப்பதே நாடெங்கும் – கண்ணீர்
விடுவதா பெற்றோர்
வீடெங்கும்!
பெற்றே
வளர்த்து சீராட்டி –கொஞ்சிப்
பேசியே நாளும்
பாராட்டி !
கற்றே உயர்ந்திடச்
செய்தாரே –இன்று
கண்ணீர் மழையெனப்
பெய்தாரே!
அந்தோ இனியவர்
என்செய்வார் –மன
ஆறுதல் எவ்வண்
அவரெய்வார்
வெந்தே சாவது தலைவிதியா! –மேலும்
விளம்பிட வேறு
மதியிலையா!?
இருவர் மாட்டு ஏற்படுமே – காதல்
என்றால் உண்மை
பொருள்படுமே
ஒருவர் மாட்டு தோன்றுவது –என்றும்
ஒருதலைக் காதல்
எனப்படுமே!
வேண்டாம் இந்த விளையாட்டும் –அதன்
விளைவை எடுத்தே
இதுகாட்டும்!
ஈண்டே இதுவே முடிவாக – பாடம்
இளையோர் கற்றிட
விடிவாக!
புலவர் சா இராமாநுசம்

