தலைநகர் வாழும் தமிழர்களே-நாளை
தன்மானம் காப்போம் திரளுங்கள்
அலைகடல் சீரணி அரங்கத்தின்-முன்
அலையலை எனவே வாருங்கள்
நிலைபெற முல்லை அணைகட்டும்-உரிய
நீதியின் குரலே முழங்கட்டும்
இலையிடம் துளியென கூடட்டும்-கேரள
எதிரிகள் மிரண்டு ஓடட்டும்
உடைப்போம் அணையை என்கின்றார்-இது
உறுதி உறுதி என்கின்றார்
எடுப்போம் அனைவரு உறுதிமொழி-நம்
எதிர்பை காட்டும் இறுதிவழி
தடுப்போம் உயிரைக் கொடுத்தேனும்-வீரத்
தமிழனாய் வாழ்வோம் இனியேனும்
தொடுப்போம் அறப்போர் திரளுங்கள்-பலி
தேவையா ஆள்வோர் கூறுங்கள்
எங்கும் மக்கள் வெள்ளமென-கண்
எட்டிய வரையில் சொல்லவென
பொங்கிய கடலாய் பொங்கட்டும்-மக்கள்
புரட்சியின் குரலே ஓங்கட்டும்
சிங்கம் போன்றே எழுவீரே- பெரும்
சென்னை மாநகர் வாழ்வோரே
அங்கம் துடித்திட வாருங்கள்-சீரணி
அரங்கத்தின் முன்னே திரளுங்கள்
புலவர் சா இராமாநுசம்

