Thursday, June 21, 2012

உதிரிப் பூக்கள் மூன்று!


             மதி!

விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
   விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
   மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
   கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
   தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!

            தென்றல்!

தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
   தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
  உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
   செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
   தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

          நினைவு!


கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
   கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
   தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
   சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
   குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை

               புலவர் சா இராமாநுசம்
       

       இனிய உறவுகளே! நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புப் பற்றி
       அனைவரும் அறிவீர்கள். எனவே மேலும் இங்கே நான் அதை
       போடத் தேவையில்லை எனக் கருதுகிறேன்
                           ஆனால் 
                ஒரு முக்கிய( திருத்த) அறிவிப்பு
   அக்கூட்டதிற்கு தலைவராக மூத்த பதிவரான சென்னைப் பித்தன்
   அவர்கள இருப்பார்கள். நான் முன்னிலை வகிக்கிறேன். அதுதான 
   முறையானதாகும் சரியானதாகும்.  இது என் விருப்பம் மட்டுமல்ல
                       வேண்டுகோளாகும்
           அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்


                          புலவர் சா இராமாநுசம்
     


Wednesday, June 20, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே!

    ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப்பாவே!
    தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத்தில்!
    தானாய் வந்தது அலைபோல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலைபோல!
    வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!  

    உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்பூவே!
    போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலைபெற்றேன்!
    பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்ததுவே!

    பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதிடுவேன்!
    வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்திடிமே!
    தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரியாதே!
    காதில் அழைப்பது விழுந்தாலும-என்
    கவன மதிலே செல்வதில்லை!

    படுத்த படியே சிந்திப்பேன்-என்
    பக்கத் தில்பேனா தாளுமே!
    தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறைவில்லை!
    அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணாதாம்!
    எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயாதாம்!

    அப்பா  வேதனை ஆப்பா-தினம்
    ஆனது என்நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப்பாவே!
    ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
    இப்பா போதும் முடியப்பா-சோர்வு
    எழவே தொடரா படியப்பா!

              புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 19, 2012

போனாய் எங்கே தமிழ்மணமே?


போனாய்  எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்
   பார்த்திட மறையும் தமிழ்மணமே!
ஆனாய்  என்ன  அறியோமே-எங்கள்
   ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
  தேடி  எடுத்துத் தருவாயே!
மானெனப் பாய்ந்து போனதுஏன்-இந்த
   மறையும் நிலைதான் ஆனதுஏன்?


எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
   எதிரியை எதிர்த்து வெல்வாயா?
இங்கே பலரும்  அலைகின்றார்-தினம்
     ஏங்கி  ஏங்கி குலைகின்றார்!
அங்கே தங்கி விடுவாயா-மனம்
     அஞ்சுதே துயரம் படுவாயா?
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
   பதிவரின் துயரை உடன்பாரும்!
 
முன்னே ஒருமுறை இவ்வாறே-துயர்
   மூண்டிடச் செய்தல் எவ்வாறே!
என்னே அருமை கண்மணியே-இது
   ஏற்புடை செயலா தமிழ்மணியே!
பொன்னே என்றுனை காத்திடவும்-தினம்
    போற்றி வரவை நோக்கிடவும்,
மின்னே போலத் விரைந்திடுவாய்-வலை
   மேதினிக் காணத் தந்திடுவாய்!
 
           புலவர் சா இராமாநுசம்
    
  

Sunday, June 17, 2012

சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்

       இனிய உறவுகளே!
                சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்
     பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்
     இளந்தமிழன் என்னும் இதழ் பற்றிய விளக்கமும்
                                   வாழ்த்தும்

இளந்தமிழன் என்னுமொரு திங்கள் ஏடே-நல்
   இலக்கியமாய் வருகிறது! இல்லை ஈடே!
உளந்தமிழே மெய்கண்டார் மெய்யே கொண்டார்-பல
   உண்மைகளை உள்ளபடி இதழில் விண்டார்
வளந்தருமே தமிழுக்கும் அவரின் தொண்டே-இதழ்
   வரலாற்றில் தனியிடமே அவருக்   குண்டே
அளந்தறிய இயலாத சிறந்த அன்பே-எதிலும்
   அடக்கம்தான் அவரிடத்து கண்ட பண்பே!

அந்நாளின் செய்திகளை நாமும் அறிய-அவர்
    ஆற்றுகின்ற அரும்பணியை சொல்லல் அரிய
எந்நாளும் படிப்பதற்கு ஏற்ற வகையில்-பல
   எண்ணற்ற சான்றோரின கருத்துக் குவியல்
இந்நாளில் பலர்காண இதழில் வருமே-நம்
   இதயத்தில் தனக்கென்றே இடமும் பெறுமே
பொன்னாக அதைப் போற்றிக் காக்கவேண்டும்-தமிழ்
   பெருமைக்கு அதுமேலும் வளர யாண்டும்!

பயன்கருதா நோக்கமுடன் செய்யும் பணியே-நம்
   பைந்தமிழுக் கழகூட்டும் பொன்னின் அணியே
நயன்தூக்கிக் கட்டுரைகள் எதையும் செய்தே-இதழ்
   நடத்துவதால் பட்டறிவு நாமும் எய்த
சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்-அவர்
   சமுதாய வாழ்வுக்கே தன்னை ஈன்றார்
தமரொன்றே தமிழென்றே வாழும் பெரியார்-ஏதும்
   தன்னலமே இல்லாத தூய்மைக் குரியார்!

தனக்கென்றே தனிப்பாதை வகுத்துக் கொண்டே-இளந்
   தமிழனென இதழ்தன்னில் செய்யும் தொண்டே
மனக்குன்றில் மறையாது வடிக்கும் மொழியே-நம்
   மாத்தமிழின் சிறப்பினைக் காணும் விழியே
எனக்கென்ற சுயநலம் ஏதும் இல்லார்-பலர்
   எண்ணத்தில் மெய்கண்டார் வாழும் நல்லார்
வனக்குயிலாய் முத்தமிழின் இசையே பாட-தமிழ்
   வரலாற்றில் அவர்புகழே நெஞ்சில் ஆட


                      புலவர் சா இராமாநுசம்
                   மேனாள் மாநிலத் தலைவர்
                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்










Friday, June 15, 2012

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா?
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-உள்ள
சூழ்நிலை! தனியார் பள்ளிகளே! 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியரவரே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட!
கனிவாய் அவர்சொலல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே!
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பதும் மறைவது எந்நாளில்!

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே!
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே!
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை!
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார்!
எனவே,
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா?
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக!
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்!
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 12, 2012

பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பாராட்டும் வாழ்த்தும்

          பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு
  நாலாவது மட்டுமே! ஆனால் விவசாயத்துறையில்
  கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
  மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
  பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
  அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்
           விவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,
 மத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்
 தந்துப் பாராட்டியுள்ளது


 .
 படிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட
    பாக்கத்து விவசாயி ரெட்டி யாரே!
கொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்
    குடியரசு  தலைவரின் கையால் நன்றே!
எடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி
   இனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண!
தொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்
   தொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்
   உள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே!
பழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்
   பலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்
தொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு
  தொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை!
அழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல
   ஆய்வுகள்! முயற்சிகள்! உண்டோ! எல்லை!

பூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்
    போடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி!
மேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக
    மேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி!
பாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்
   பள்ளியே வயல்தானே! தந்த வெற்றி!
ஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்
   அனுபவம் கண்டதே வெற்றி! வெற்றி!


வருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை
    வாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே!
திருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே
   தேடிவந்து வாழ்துவரோ? இல்லை! நொந்தார்!
நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
   நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
  பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!

உலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்
   உழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்!
நிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி
    நீங்கிடச் செய்வது உழவன் தொண்டே!
இலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது
   இன்றல்ல! என்றாலும் வருமே அந்நாள்!
பலகற்றும் கல்லாரே! அறிவார் நன்றே-அழி
    பசிவர அனைத்தும் பறக்கும் அன்றே!

                    புலவர் சா இராமாநுசம்

Sunday, June 10, 2012

நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!


தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
   தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்!
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
    வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்!
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
   போகவில்லை!அறிந்தின்று! சிறுமைப் பட்டோம்!
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
   அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்!

ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
    உட்கார நாற்காலி ஒன்று தந்தால்!
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
   பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே!
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
   எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே!
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
    சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்!

ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
   ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை!
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
    நிலைப்பது ஒற்றுமை காணும் ஒன்றா?
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை!-நம்முள்
   சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை!
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
   போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்!
   

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
   உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்!
நன்றேதான்  அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
   நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்!
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
   இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே!
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
       ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

                         சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...