Saturday, September 17, 2016

இரங்கல் கவிதை!



கொள்ளிவைக்கப் பெற்றார்கள்! மகனே உன்னை-ஆனால்
கொள்ளிவைத்து கொண்டாயே நீயே தன்னை
அள்ளியுனை மார்பணைத்துப் பாலும் தந்த-இங்கே
அன்னையவள் வற்றாத கண்ணீ சிந்த
துள்ளுகின்ற வயதுனக்கே! துடிக்கும் தந்தை-உற்றார்
தோழரேன பல்லோரும் வெடிக்க சிந்தை
சொல்லுகின்ற ஒன்றல்ல விக்னேஷ்! துயரம்-உண்மை!
சொல்லியினி பயனில்லை திரும்பா உயிரும்!


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 15, 2016

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம் இணைந்தால் போதும் நன்றாக!


இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவரும் ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! நடத்திடின் உய்விரே!


வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 13, 2016

பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்!


மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
ஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் ?
இமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்
தேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்
உரிய நேரம் ! தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி !பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை
சட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை! உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும்! சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்
குழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது! மீண்டும் பணிவோடும் ,கனிவோடும்
வேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன்  நதி அனைத்தையும்  இணைக்க,

பகுதி பகுயாக இணைக்க உரிய  திட்டங்களை  வகுத்து   போர்க்கால  நடவடிக்கையாக  என்ன செய்ய வேண்டுமோ அதையும்  செய்வது  உங்கள்   முக்கி  கடமையாகும்  சிந்தியுங்கள்!
செயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர்  பொன்  எழுத்தாக  பொலிவு  பெறும்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, September 12, 2016

அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


இனிமேலும் காவிரிநீர் வருமா மென்றே –நாம்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம் நன்றே
கனியேது காயின்றி அறிதல் இன்றே –சற்றும்
கனியாது கன்னடரின் உள்ளம் ஒன்றே
பணியாது நீதிக்கும் அறிந்து கொள்வோம் –காவிரி
பயிர்காக்க மாற்றுவழி கண்டால் வெல்வோம்
அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ
அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


புலவர் சா இராமாநுசம்

Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...