Tuesday, February 9, 2016

நான் எழுதிய இரங்கல் கவிதை!

என் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி  நான் எழுதிய இரங்கல் கவிதை!


தனக்குநிகர் இல்லையென உதவும் நண்பர் –இவர்
தன்னிடத்தே கொண்டவராய் விளங்கும் பண்பர்
எனக்குமவர் பல்வகையில் உதவி செய்தார் –ஈடே
இல்லாத அன்பதனை மழைபோல் பெய்தார்
மனக்கவலை ஏதுமில்லா குடும்ப வாழ்வே –ஏனோ
மறைந்தீரே மின்னலென பலரும் அழவே
குணக்குன்றே வேள்நம்பி! நன்றா இதுவே-என்றே
குமுறுகின்ற நெஞ்சுதனைத் தேற்றல் எதுவே!


ஆள்வினையே மிக்கவராய் வாழ்நாள் முற்றும்-தேடி
ஆய்ந்திட்ட குறிப்புகளை முறையாய் சாற்றும்
வேள்நம்பி தொகுத்தநூல் திராவிட இயக்கம்- வளர்ந்த
வரலாறே என்றேதான் படித்தோர் வியக்கும்
நாள்வருமே புகழ்தருமே உலகம் காணும் –மேலும்
நற்றமிழ! உம்மாலே பெருமை பூணும்
தோள்மீறி வளர்ந்திட்ட மக்கள் தம்மை -நீரும்
தோழரென பழகியது காணின் செம்மை!

அகழ்வாரைத் தாங்குநில பொறுமைக் கொண்டே-தீமை
அடுத்தடுத்து செய்தாலும் விளக்கி விண்டே
இகழ்வாரும் பாராட்ட வாழ்ந்தார் இவரே – அதுவே
இயல்பாகக் இறுதிவரை மறைந்தார் எவரே!
புகழ்வாராம் போகவிட்டுப் புறமே பேசும் –தீய
புல்லர்களின் முகம்காண அகமே கூச
திகழ்வாராம் வேள்நம்பி மறக்கப் போமோ –நாளும்
தேம்புகின்றோம் மீண்டுமுமை காணல் ஆமோ

அப்பப்பா நம்மிடையே மலர்ந்த நட்பே-கற்ற
அன்னையவள் தமிழ்தந்த அழியா பொட்பே
தப்பப்பா தவிக்கமனம் விட்டுச் சென்றீர் – மீண்டும்
தவறாது சந்திக் வருவேன் என்றீர்
செப்பப்பா செப்பாது போனீர் எங்கே-அதனால்
செயலற்றார் எனைப்போல பலரும் இங்க
எப்பப்பா கண்போமென ஏங்க மனமே –சேலம்
என்றாலே துயரத்தில் மூழ்கும் தினமே

நீரின்றி நானில்லை என்றே வாழ்ந்தோம்-அந்த
நினைவின்றி சென்றீரா துயரில் வீழ்ந்தோம்
ஏரின்றி உழவுதனை செய்வார் போன்றே –இன்றே
என்நிலமை ஆயிற்று சொல்லில் சான்றே
காரின்றே வான்மழையே வருமா என்றே- வாடிக்
காத்திருக்கும் உழவன்தன் நானும் இன்றே
வேரின்றி அற்றமரம் அந்தோ நானே-மேலும்
விளக்குவதால் ஏதுபயன் ! வாழ்தல் வீணே

திரும்பிவரும் இடத்திற்கா நம்பி சென்றீர் –மீண்டும்
திரும்பாத இடத்திற்கேன் விரைந்து சென்றீர்
கரும்புமனம் கொண்டவரே காலன் வந்தால் –உம்முன்
கைகூப்பி பணிவாக அழைப்பு தந்தால்
விரும்பியுடன் போனதுவும் நியாயம் இல்லை!-அதனால்
விளைந்திட்ட வேதனைக்கே உண்டோ எல்லை
இரும்புமனம் கொண்டவரும் இளகிப் போனார்-என்றும்
இறவாத புகழ்பெற்றீர் வாழ்க நண்ப!

புலவர் சா இராமாநுசம்

Sunday, February 7, 2016

நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!




நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!
குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்
விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்
புலவர் சா இராமாநுசம்

Monday, February 1, 2016

முகநூல் பதிவுகள்!


பொதுவாக திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம்! காரணம் அது எல்லாநாட்டுகும் எல்லா மதங்கள், சமயங்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை கொண்டிருப்பதே ஆகும் என்பர் !ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களின் கருத்துகள் சில இக்காலத்திற்கும் சில நாடுகளுக்கும் பொருந்தாது எனவும் ஒரு சிலர் சொல்கிறார்களே! உங்கள் கருத்தென்ன!!!?

சாதரணமாய் மனித மனம் நடந்த பிழையை தான் ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மேல் சாற்றுவது நடை முறையாக உள்ளது! உதாரணமாக , ஒருவன் படி இடித்தது வலிக்கிறது என்கிறான்! ஆனால் ,உண்மையில் படிவந்தா இவனை இடித்தது! இல்லையே! இவனே , கவனிக்காமல் படியில் இடத்துக் கொண்டு, படி இடித்தது என்கிறான்! இதுபோலத்தான் வாழ்வில், சில நிகழ்வுகள்! நடக்கின்றன! ஆனால் யாரும் எண்ணிப் பார்பதில்லை!

காலமாற்றத்தால் கருத்துகளும் பழக்க வழக்களும் மாறத்தான் செய்யும் என்பது உண்மைதான்! அவை ,முதலில் கசந்தாலும் படிப்படியா நடைமுறையாக பழகித்தான் போகின்றன! முன்பெல்லாம் கணவன் பெயரைச்
சொல்லவே மனைவிமார் விரும்ப மாட்டார்கள்! ஆனால்!? இன்று! அப்படியா! தன் கணவன் பெயரைச் சொல்லி அழைப்பதையும் தாண்டி , வாடா, போடா ,என பேசிக் கொள்வதை பல குடும்பங்களில் பார்கிறோம்! அதுமட்டுமா இந்நிலை சினிமாவிலும் சீரியலிலும் சர்வ சாதரணமாகிட்டது ! வயதான என்னைப் போன்றவர் வருந்தினாலும் பயன் இல்லையே!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, January 28, 2016

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

புலவர் சா இராமாநுசம்

Monday, January 25, 2016

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே


காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

Thursday, January 21, 2016

வலையுலக உறவுகளுக்கு அறிவிப்பு!


உறவுகளே வணக்கம் சில நாட்களாக கண்ணில் கோளாறு அதனால் ,வலை வழி வரவோ படிக்கவோ  மறு மொழி தரவோ இயலவில்லை மருத்துவ சிகிச்சை! நடக்கிறது இன்னும் சிலநாட்கள் ஆகலாம்! மன்னிக்க!

          புலவர்  சா  இராமாநுசம்

Saturday, January 16, 2016

திருவள்ளுவர் திருநாள் !


திருவள்ளுவர் திருநாள் !

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்


சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...