Saturday, September 9, 2017

ஓட்டுப்பட்டைக் காணவில்லை தமிழ்மணமே-ஏனோ உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே!





ஓட்டுப்பட்டைக்  காணவில்லை  தமிழ்மணமே-ஏனோ
  உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே
காட்டுகின்றாய் பட்டியலை தமிழ்மணமே-நேற்று
   காட்டியதே  மாறாமல்  தமிழ்மணமே
வாட்டுகின்றாய் எதற்காக தமிழ்மணமே-நாங்கள்
   வருந்துவதை அறிவாயா தமிழ்மணமே
மீட்டுவிடு முறைப்படியே தமிழ்மணமே-நீயும்
   மீண்டும்வர வேண்டுகிறேன் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, September 7, 2017

என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா




என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது
ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா—அதனால்
உளம்வருந்தி எழுதிவிட்டேன்! ! பாவிந்தா
சொன்னதென! மறந்துவிட !சுயநலமே ஓங்கிவிட
மன்னரென ஆளுகின்றார் கோவிந்தா- நானும்
மனமொடிந்து எழுதிவிட்ட பாவிந்தா
பின்னிருந்து தள்ளிவிட இரண்டுமே இணந்துவிட
பேச்சுமூச்சு ஏதுமில்லை கோவிந்தா உள்ளுக்குள்
புகையநெருப் பனையவில்லை பாவிந்தா
போகப்போக தெரியவரும் போலித்தனம் அறியவரும்
புல்லர்வேடம் புரியவரும் கோவிந்தா-காலம்
புலப்படுத்தும் காத்திருக்க பாவிந்தா


புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 6, 2017

முகநூல் பதிவுகள்!



உறவுகளே
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயஆட்சி என்ற கோரிக்கையை குறிக்கோளாக்ஃ கொண்டு கட்சி வேறுபாடு இன்றி மக்கள் அனைவருமே ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றால் தான்,இன்றைய
அரசியல் அவலங்களைப் போக்க முடியும்! செய்வார்களா!

இந்த செயலை இந்த வகையில்
இவன் செய்து முடிப்பான் என்று ஆய்வு
செய்து அந்த செயலை அவன் செய்ய விடுதல்
நன்று என்பதே வள்ளுவர் வாக்கு! மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்வோர் அறிந்து நடந்தால் சரி


மத்திய அமைச்சரவை விரிவாக்கப் பட்டு பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமனுக்கு அளிக்கப்பட்டுள்ளது! மிகவும் முக்கியமானது
பாதுகாப்புத் துறை, அது அதில் சற்றும் அனுபவம்
இல்லாதவரிடம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும்
கவலைக்குரியது ஏதோ பங்கு பிரிப்பதைப் போல
எதையும் எண்ணாமல் அமச்சரவை விரிவாக்கம்
நடந்துள்ளதே தவிர நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை


நீட் தேர்வில் விலக்குப்பெற ஆந்திர மாநிலமே நமக்கு முன்மாதிரி. அரசியலமைப்புச் சட்டத்திலேயே 32 வது திருத்தமான amendment of 371 D in 1974 அரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது என உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசும் பெற முயற்சித்திருக்கவேண்டாமா!?? எப்படி செய்வார்கள்! இங்கே ஆளும்
அமைச்சர்களுக்கு , தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதுதானே
முழுநேர வேலை! எத்தனை அனிதாக்கள் பலியானாலும் அவர்கள்
கவலைப்பட மாட்டார்கள்! மக்கள் எழுச்சி பெறாதவரை இதுதான்
நடக்கும்!
 
 


புலவர்   சா  இராமாநுசம்

Tuesday, September 5, 2017

குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!



நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைத்தான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இல்லை ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவோ அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Sunday, September 3, 2017

ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே!



ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே
ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே
நாட்டுமக்கள் அனைவருமே அறிந்து கொள்ள
நாட்களுமே ஒவ்வொன்றாய் நகர்ந்து தள்ள
காட்டுகின்றார் அடிமையென ஆள்வோர் சுகமே
காத்திடவே வெட்கமது இன்றி அகமே
ஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே
உணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே


புலவர்  சா  இராமாநுசம்

Saturday, September 2, 2017

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!



இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே


உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுச

Thursday, August 31, 2017

பிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே!



நித்தம் ஒருகவிதை  நிலையாக  எழுதிவிட
சித்தம்  இருந்தாலும்  செயல்படுத்த  இயலவில்லை!
முதுமை  முன்னாட   முதுகுவலி பின்னாட
பதுமை  ஆகிவிட்டேன்  பதிவெழுதா  நிலைபட்டேன்!

மோனை  எதுகையென  முறையாக  எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்றுப்  போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு  யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கைப் போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும்  குறைந்துவிட்டார் பலபேரைக்  காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும்   காணவில்லை!
உடலுக்கே  சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே அலைபோல  கவலையிலே  மனமோயா!

மாற்றுவழி  தேடினேன் முகநூலால்  தேற்றினேன்
சாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்!
உம்மை மறபேனா ?  ஓடிவந்தேன் இங்கேயும்
எம்மை  மறந்தாரை  யாம்மறக்க  மாட்டோமால்!

சிந்தனையின்  துளிகளெனச்  சிலவரிகள் எழுதினாலும்
வந்தவர்கள்  பலநூறாம் வருகின்றார்  தினந்தோறும்!
விந்தையதில்  என்னவெனில் விரிவாக  சொல்வதெனில்
சந்தையது அப்பப்பா ! சந்தித்தேன் அங்கேதான்!

வலைதன்னில்  காணாத  பலபேரும்   அங்கே
நிலைகொண்டு எழுதியே  பெற்றார்கள்  பங்கே
பிறந்த  இடம்விட்டுப்  போனாலும்  உமையெல்லாம்
மறந்து விடுவேனா  மறுபடியும்  வருவேனே!
                       புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...