Friday, June 8, 2012

மாட்சிமை மிக்க மேயரய்யா!


ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னைக் காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையெனக் கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல்ல-இது
குத்தும் கவிதை ஆக்கமல்ல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
             புலவர் சா இராமாநுசம்

 

Wednesday, June 6, 2012

அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே!


அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

                               புலவர் சா இராமாநுசம்

Monday, June 4, 2012

செவிடன் தனக்கே சங்கும் எதற்கே?


செவிடன் தனக்கே சங்கும் எதற்கே-என
  செப்பினார் அருணா தலைப்பும், அதற்கே!
கவிதைத் தருகெனக் கனிவுடன் கேட்டார்-தன்
  கருத்தினை மறுமொழி தன்னிலே இட்டார்!
தம்பியின் விருப்பை தனயன் ஏற்றேன்-இங்கே
   தந்திடும் வாய்ப்பை தானும் உற்றேன்!
நம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
   நல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்!


மத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
   மக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
   ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்-என
   இயம்புதல் பொருத்தம் ஆமே! இங்காம்!
சித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
   சொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!


ஊற்றென ஊழல் ஓடுவ கண்டோம்-பலரும்
  ஓங்கிட குரலும் ஒலித்திட விண்டோம்!
ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
  ஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை!
சாற்றுவ செவிடன் காதில் சங்காம்-மேலும்
   சாற்றிடில் மக்கள் மறதிக்கும் பங்காம்!
மாற்றமே வருமா மாண்பினைத் தருமா-மக்கள்
   மறந்தால் அதுவும் செவிடன் சங்காம்!

                               புலவர் சா இராமாநுசம்




Saturday, June 2, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!


உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்


Thursday, May 31, 2012

அவலம் அவலம்! அவலம் தானே!-

அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
  அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
  காண்பது இன்றே கவலை தானே!

மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
   மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய்  ஆனோம் தானே-நாம்
   புரிந்தும் மறந்து போவோம் தானே!

அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
   சுரணை இலையெனக் காட்டு கின்றார்!

பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
    பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
   செப்பிடின் வருவதோ பீதி எல்லை!

போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
   போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
   கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!

மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
   மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
   ஆர்பாட்டம் செய்வது அருவ ருக்கும்!

இரட்டை  வேடமே போடு கின்றார்-இங்கே
   ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
   ஆளவோர் செயலும் போகின் றதாம்!

மௌனம்  சம்மதம் என்ப தல்ல-மக்கள்
   மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
   கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!

                                 புலவர் சா இராமாநுசம்


Wednesday, May 30, 2012

ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு!


ஓடு மனிதா நீஓடு-இவ்     
  உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
  தேவை எதுவோ அதைநாடு!

சுயமாய் சிந்தனை செய்வாயா-உன் 
  சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
  பயன்தரக் காண்பாய் நீயாற்று!

தோல்வி வரினும் துவளாதே-உடன்   
   தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
   வேதனை முற்றும் தவிடுபட!

முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்    
   முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
  அவ்வழி செயலும் புரிவாயா!

இன்னார் இனியர் பாராதே-ஏதும்     
   இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
  உதவின் அதுவே பேரளவே!

அன்பின் வழியது உயிர்நிலையே-நம்    
   ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
   இல்லா உடம்பு ஆகியதே!

காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்    
  காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
   நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!


                   புலவர் சா இராமாநுசம்

 


 

Monday, May 28, 2012

ஏழரை நாட்டுச் சனிபோல!


ஏழரை நாட்டுச் சனிபோல-விலை
  ஏறின பெட்ரோல் நனிசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
   என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
   வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம்  பயனென்ன!?-இக்
  கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
   பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
  தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
  பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
  பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
   மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
   இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
  தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
   போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

               புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...