Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!



இடையில் இருப்பது இருநாளே-மேலும்
எண்ணில் தேர்தல் திருநாளே
தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும்
தவறின் பின்னர் வாடுதலே
விடையில் கேள்வி ஆகிவிடும்-என்றும்
வேதனை மிகுதியாய் நோகவிடும்
படையுள் வீரரின் கைவாளாய் -வாக்கைப்
பயன்தர ஆவன செய்வீரே!


புலவர் சா இராமாநுசம்

Friday, May 13, 2016

நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் !



நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே
நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார்
நடக்கின்ற வாக்குறுதி அதிலேசில உண்டே –அதையே
நன்றாக சிந்தித்து, செய்தக்கார் கண்டே
விடையாக யாரென்று நீர்காண வேண்டும் –அன்னார்
வெற்றிக்கு வழிதன்னை உள்ளத்தில் பூண்டும்
தடையின்றி தக்கதோர் வழிசெய்ய ஈண்டும் –யாரும்
தவறாமல் வாக்கினை வழங்கிட வேண்டும்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 11, 2016

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே !


வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே


புலவர் சா இராமாநுசம்

Monday, May 9, 2016

பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்


பாதை மாறிப் போனால்
பயணம் கெட்டுப் போகும்-மிக்க
போதை ஏறிப் போனால்
புத்திக் கெட்ட தாகும்
தீதை நீக்க ஓட்டே
தேடி வரினும் கேட்டே -நீயும்
பேதை அல்ல காட்டே
பெறுவ தவலம் நோட்டே


புலவர் சா இராமாநுசம்

Sunday, May 8, 2016

அன்னையர் தின நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?


உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 6, 2016

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!


இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
   இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
   அன்னையவள் தாரமவள் மறந்தா?  போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில்  உற்றேன்-ஆனால்
    குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்
    நலன்பேண நான்காணும்  இரண்டு கண்கள்!

செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
     சிறைபட்டு  கிடக்கின்றேன் நானும்  இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
    வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத  ஆடல் தானே-இன்று
    ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
    எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!

துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
    தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
    பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா  நாடகமே என்றன்  வாழ்வே –நான்
    நடைப்பிணமே! விரைவாக  வருமா  வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை  ஆனேன்  இன்றே –இனி
    இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
                         
புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, May 4, 2016

ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிகவே
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்மின்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதிலே
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...