ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!
கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!
புலவர் சா இராமாநுசம்

