Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

Monday, August 29, 2016

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற எண்ணத்தால் வந்ததே கேடாம்!

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற
எண்ணத்தால் வந்ததே கேடாம்
வந்திடும் நீரெல்லாம் முற்றும்-நதியில்
வாராது தடுத்திட சற்றும்
சிந்தனை செய்வது சரியா-நாளும்
செயல்பட முனைவது முறையா
நிந்தனை செய்வதா எம்மை-நாங்கள்
நீரின்றி சாவதா செம்மை!?


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 24, 2016

எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!


எங்கே போகுது தமிழ்நாடு-மேலும்
இப்படி நடந்தால் பெருங்கேடு
இங்கே எதுவும் சரியில்லை-கேட்க
ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை
பங்கே பிரித்துக் கொண்டாராம்-நாளும்
பழங்கதை எடுத்து விண்டாராம்
சங்கே ஊதியே விடுவாரோ –இவர்
சண்டையில் மக்கள் கெடுவாரோ


புலவர் சா இராமாநுசம்

Sunday, August 21, 2016

முகநூல் பதிப்புகள்!



தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இல்லை என்றால் முற்றிலும் கெடும்
அமுதுகூட அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடுமென்பது தானே
ஆன்றோர் வாக்கு!

ஒலிம்பிக்கில் , வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற வீர மங்கையருக்குப் பலரும் வாழ்த்து தெரிவிப்பது பாராட்டுக்குரியது
ஆனால் அரசியல் வாதிகளும் சினிமா பிரபலங்களும் பாராட்டுவது
வியப்பாக உள்ளது! இவர்கள் தங்கள் செல்வாக்கினை விளையாட்டுத்
துறையை மேம்படுத்த இதுவரை, ஏதேனும் ஊக்கமோ, உதவியோ செய்தார்களா!!! இல்லையே! இதுவும் அவர்கள் தங்களை மேலும் விளம்பரப் படித்திக் கொள்ளும் ஒன்றோ என்றுதான் கருத த் தோன்றுகிறது!

பட்டறிவுக்கும் பகுத்தறிவுக்கும் வேறுபாடு உண்டு! ஒருமுறை விளக்கைத் தொட்டு சூடு பட்ட குழந்தை மறுமுறை தொடாது! இது
பட்டறிவு! நஞ்சுண்டவன் சாவான் என்றால், அவன் மட்டுமல்ல, நஞ்சு உண்டவள், நஞ்சு உண்டவர் நஞ்சு உண்டது என, அனைத்தும்
சாவுமென அறிவது பகுத்தறிவாகும்!

தமிழக சட்னமன்ற சபாநாயகருக்கு ஒரு வேண்டு கோள்!
மாண்பு மிகு ஐயா! எதிர் கட்சி உறுப்பினர் (88 பேர்) அனைவரையும் ஒரு வாரத்திற்கு, மன்ற நிகழ்சிகளில் கலந்து
கொள்ள தடை விதித் திருப்பது அறமோ, முறையோ அல்ல! அதனை
மறுபரிசிலீனை செய்து குறைத்து அவர்களும் தங்கள் சனநாயக்
கடமையை ஆற்ற ஆவன செய்வீர்கள் ,என நாடே எதிர் பார்க்கிறது! மாண்பு மிகு முதல்வர் அவர்களும் இதில் கவனம்
செலுத்த பணிவன்போடு வேண்டுகிறேன்!


உறவுகளே!
சமுதாயத்தில் ,நாம் பிறருக்காக அஞ்சி,தவறு செய்யாமல் வாழ்வதை, விட நம் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே நேர்மையான நடமுறையாக இருக்கும்! காரணம், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ
அல்லது, சமுதாயத்தில் மற்றவர்களுக்கோ அஞ்சினால் ,அவர்கள் காணாத வகையில் தவறு செய்யத் தோன்றலாம்! ஆனால் நாம், நம்
மனசாட்சிக்குப் அஞ்சினால் தவறே நடக்காது ஏனெனில் அதுதான்
நம்மோடு எப்பொழுதும் இருப்பதாகும்


மக்கள் ,நடுத் தெருவிலே நடக்காமல் நடை பாதையில் நடப்பது சட்டத்திற்கு மதிப் பளித்து , என்றால் பாராட்டுக்குரியது!
தெருவில் நடந்தால் வரும் வண்டிகள் மோதுமே என்று
அஞ்சிதான் என்றால், அது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி
இருக்க முடியும்! 

Monday, August 15, 2016

பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே


பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே


வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே

கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, August 14, 2016

தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே


தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ
தன்னைக் காக்க மறந்தானே
அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா
ஆழ்ந்த துயில்கொள பறந்தானே
இமையின் இருவிழி நீர்சிந்த –துடிக்கும்
இதயம் தாங்கா துயர் முந்த
எமையேன் மறந்தாய் குமாரநீ-முற்றா
இளந்தளிர் முத்து குமராநீ


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...