Sunday, February 17, 2013

பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!



ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, February 15, 2013

வான் சிறப்பும் வேண்டுதலும்!



மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா! 

சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 13, 2013

காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!




கண்ணே  இழந்து  போனாலும்  -வாழக்
     கருதியே  உறுதியாய்  இருந்தவளே!
பெண்ணே  இறந்து  போனாயே  -காமப்
     பேயனால்  இந்நிலை  ஆனாயே!

காதல்  கிறுக்கர்கள்  பெருகிவிட்டார்-இளம்
    கன்னியர்  பலரும்   கருகிவிட்டார்!
வேதனை  நடப்பதே   நாடெங்கும் கண்ணீர்
   விடுவதா  பெற்றோர்  வீடெங்கும்!

பெற்றே  வளர்த்து  சீராட்டி கொஞ்சிப்
    பேசியே  நாளும்  பாராட்டி !
 கற்றே  உயர்ந்திடச்   செய்தாரே இன்று
     கண்ணீர்  மழையெனப்  பெய்தாரே!

அந்தோ இனியவர்   என்செய்வார் மன
   ஆறுதல்  எவ்வண்  அவரெய்வார்
வெந்தே  சாவது  தலைவிதியா! மேலும்
   விளம்பிட  வேறு    மதியிலையா!?

இருவர்  மாட்டு  ஏற்படுமே காதல்
   என்றால்  உண்மை  பொருள்படுமே
ஒருவர்  மாட்டு   தோன்றுவது என்றும்
    ஒருதலைக்  காதல்  எனப்படுமே!

வேண்டாம்  இந்த  விளையாட்டும் அதன்
   விளைவை  எடுத்தே  இதுகாட்டும்!
ஈண்டே   இதுவே  முடிவாக பாடம்
     இளையோர்   கற்றிட  விடிவாக!


               புலவர்  சா  இராமாநுசம்
   

Monday, February 11, 2013

போறா தம்மா போறாதே -உழவன் போட்ட முதலே ஆகாதே!




போறா  தம்மா போறாதே  -உழவன்
       போட்ட  முதலே  ஆகாதே!
ஆறாப்  புண்ணாம்  அவன்மனமே உடன்
      ஆற்ற வேண்டும்   இத்தினமே!
மாறா  தம்மா  அவன்வறுமை தொகை
      மாற்றி உயர்ந்திடின்  வரும்பெருமை!
சோறே பொங்குமா  அவன்வீட்டில் அதை
       சொல்வீர்   அம்மா  நாளேட்டில்!

உழைக்கும்  கூலியாம்  விவசாயி அவன்
      உழைத்த  நிலத்தில்  பயிர்சாவி!
பிழைத்திட  ஏதும்  வழியில்லை  -பசிப்
       பிணியில்  வருந்திடு மப்பாவி!
தழைத்திட   வழியும்  செய்வீரே துயர்
      தவிர்த்திட  அன்பைப்  பெய்வீரே!
அழைத்திட  காலன்  வருமுன்னே ஆளும்
      அம்மா  அருள்வீர்  நனியின்னே!

எண்ணிப்  பார்த்தால்  இழப்பீடு யாரும்
       எண்ணிட  இயலா   பெருங்கேடு!
கண்ணில்  வழிந்த   கண்ணீரே  -உழவன்
      கழனியில்  விழுந்த தண்ணீரே!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிட உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிட
புண்ணில்  வேலைப்  பாச்சாதீர் பால்
      பொங்கிய  பின்னும்  காச்சாதீர்!
மண்ணில்  உழுதொழில்  முடங்கிவிடும் உயிர்
      மண்ணொடு  மண்ணாய்  அடங்கிவிடும்

உலகின்  அச்சாம்   ஆணியவன் வாழ
        உதவும்  உயிருக்கே  ஏணியவன்
அலகில்  துயரால்  அல்லல்பட  - இந்த
        அவனியில் பஞ்சம்   மிஞ்சிவிட
கலகமே  எங்குமே  தோன்றிவிடும்-இக்
       கருத்தை  மனதில்  ஊன்றிவிடும்
இலவுக்  காத்த  கிளியல்ல அமைதியாய்
      இனியும்  இருத்தல்  சரியல்ல!

                    புலவர்  சா  இராமாநுசம்


Friday, February 8, 2013

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும் !



ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 6, 2013

வருகின்றான் வருகின்றான் கொலைகாரப் பாவி !




வருகின்றான்   வருகின்றான்  கொலைகாரப்  பாவி அவனை
      வரவேற்பு  செய்வதா  மலர்தன்னைத்  தூவி
தருகின்றான்  மீனவர்க்கு  நாள்தோறும்  தொல்லை இதை
      தடுத்திட  இயலாதார்  தமிழனே  இல்லை
தெருதன்னில்  திரிகின்ற  நாயுக்கும்  உண்டே  -பொல்லாத்
      தீயோரைக்  கண்டாலே  குரைத்திடும்   கண்டே
திருவன்ன  திருப்பதி  வேங்கட  நீயே அவன்
       திரும்பியே  சென்றிடச் செய்திடு  வாயே

இரக்கமே  இல்லாதும்  எம்மவர்  தம்மை அன்று
       இரத்தமே  ஆறாக   ஓடியே  செம்மை
நிறத்தையே  ஈழமே  பெற்றிடக்  கொன்றான் நஞ்சு
       நிரம்பிய  குண்டினைப்  போட்டுமே  வென்றான்
அரக்கனே!  அவன்தான்!  மனிதனே  இல்லை செய்த
       அழிவுக்கு  இனியேனும்  வாரதோ  எல்லை
மறக்கவோ  இயலாத  மாபாவி  அவனே யாரும்
       மன்னிக்க  இயலாத  கொடும்பாவி இவனே!

மத்திய  அரசிதை   மதித்திட  வேண்டும்  -தமிழ்
       மக்களின்  உணர்வினை மிதிப்பதா  மீண்டும்
கத்தியின் மேலிது நடப்பதே  ஆகும்  -கண்டும்
      காணாது  இருப்பதால்  நிலைமீறிப்  போகும்
சுத்தியால்  உடைப்பதா  கண்ணாடி  தன்னை உடைந்து
        சுக்கலாய்  ஆகாதோ   அறிவீரா !?  உண்மை!
சத்திய  சோதனை  செய்திட  வேண்டாம்  -ஏழரைச்
       சனியவன்  பக்சேவை  விரட்டுவீர்  ஈண்டாம்!

                                                                புலவர்  சா இராமாநுசம்

Tuesday, February 5, 2013

செய்தி அறிவிப்பு !



           அன்பின்  இனிய   உறவுகளே!
                                                                            வணக்கம்!

                                 கடந்த  ஒரு  வாரகாலமாக நான்  புதிய பதிவு  ஏதும்  எழுத
            இயலாமலும்   மறுமொழி  இடவும் வழியில்லாமல் போய்விட்டது.
                                  எங்கள்  தெருவில்  மழைநீர்  வடிகால்  பாதை  அமைக்கும
             பணி  நடபெறுவதால்,   மண்ணைத்  தோண்ட  இயந்திரங்களைப்
             பயன் படுத்துவதன்  காரணத்தால் , தொலைபேசியும் கணனி  தொடர்பும்
              முற்றிலும்  பழுது பட்டுவிட்டது  


                                        பற்றாக் குறைக்கு  மின் தடை வேறு  இதுதான்
                காரணமாகும்.   இதுபற்றி  அன்போடு , தொலைபேசி , மின்னஞ்சல்
              வழியாகக் கேட்ட  அன்பு, வலை, முகநூல், உறவுகளுக்கு  மிக்க  நன்றி
                                             
                                            இனி வழக்கம்  போல்  முடிந்த வரை எழுதுவேன்!


                                                                                 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...